Saturday, May 08, 2010

மே 9 - அன்னையர் தினம். அன்னையின் சிறப்பை பறை சாற்றும் வகையாக நாம் பாவிப்பது தான் இந்த அன்னையர் தினம். நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, சகலமுமாய் இருப்பவர் தான் அன்னை. கருணை, அன்பு, பாசம், நேசம், அறிவு, இது போன்றவைகளை நினைக்கையிலே, நம் மனதிற்குள் வருபவள் தான் தாய்.

நாம் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதும் போது, அதில் சில வரிகளை மட்டும், கீழ் கோடிடுகிறோம். காரணம், அந்த வரியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக. இது போல தான், இந்த அன்னையர் தினமும். அன்னை என்பவள் சிறப்பு பெற்றவள். இந்த சிறப்பிற்கு, மகுடம் சூட்டும் விதமாக, இத்தினத்தை அன்னையர் தினமாக நாம் போற்றி வருகிறோம்.

இத்தினத்தில், என்னை பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய என் அன்னைக்கு எனது நன்றியை நான் உரித்தாக்குகிறேன், மற்றும் எல்லா நலவுகளையும் எனக்களித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றிகள் பல கோடி. என் அன்னைக்காகவும், மற்றும் உலகிலுள்ள எல்லா அன்னையர்களுக்காகவும் சில வரிகள் இதோ......

(இவ்விடத்தில், "நீ" என்பதை "நீங்கள்" எனவும், "உன்" என்பதை "உங்கள்" என்றும் பொருள் கொள்ளவும்.)

அம்மா, அம்மா, அம்மா
உச்ச்சரிக்கயிலே உளம் மகிழ்குது, நீ தானே - என் அம்மா....

பத்து மாத காலம், இன்னல்கள் பல ஏராளாம்
இப்புவியிலே நான் சஞ்சரிக்க, காரணம் நீ அம்மா......

உறக்கத்தில் கண் விழித்து, நான் அழுத கனபோது
உறக்கத்தை கலைத்து விட்டு, நெஞ்சோடு எனை அணைத்தாய்...

பசி என்று தெரியாமல், "ஹோ வென" அழுதேனே
பாசமாய் அமுதூற்றி, எனை நீ வளர்த்தாயே....

நடக்க தெரியா பருவத்தில், கீழே நானும் விழகயிலே,
ஓடோடி எனை தூக்கி, உளம் துடித்தாய் - நீ அம்மா....

அடம்பிடித்து, சண்டித்தனம், பல நூறு செய்கையிலே
நீதிக்கதை பல சொல்லி, அமைதிப்படுத்தினாய் - நீ அம்மா....

அனுதினமும் ரசித்தாயே, சிறு பிள்ளையாய் வளர்கையிலே
அன்பென்ற வார்த்தையின், பிறப்பு தான் - நீ அம்மா.....

பண்பாடு, பழக்க வழக்கம், கற்றுக்கொண்டேன் உன்னிடத்தில்
பாசம் என்னும் பாசறையில், எனை வளர்த்தாய் - நீ அம்மா....

மற்றவர் முன் என் தவறை, மறக்காமல் மறைத்தாயே
மனு நீதி சோழனாய், பின்பு கண்டித்தாய் - என் குறையை

வெற்றிபடிகளை, என் பாதம் மிதிக்கவே,
ஒவ்வொரு தினமும் உன் தவறாத பிராத்தனைகள்....

அயராத முயற்சியினால், குறையாத அன்பினால்
என்னை, ஆளாகினாய் - நீ அம்மா....

பல நாட்கள் தாமதமாய், வீட்டிற்கு நான் வருகையில்
பசியோடு நெடுநேரம், காத்திருந்தாய் - நீ அம்மா.....

தோல்விகளால் நான் துவண்டு, சோர்வுற்ற நேரத்தில்
தேற்றினாய் கனிவான, வார்த்தைகளில் - நீ அம்மா......

என், முகவாட்டம் நீ பார்த்து, என் மனவோட்டம் நீ அறிந்தாய்
உற்சாக வார்த்தைகளால், உச்சி முகர்ந்தாய் - நீ அம்மா......

சொல்லாலோ, செயலாலோ, நோவினைகள் நான் கொடுத்திருப்பின்
வருந்துகிறேன் அதற்காக, மன்னியுங்கள் - நீ அம்மா...

என் உயர்வில் உன் பங்கு, அளவிட முடியாதே,
அறிவின் ஊற்றிடமே, அகரம் தான் - நீ அம்மா...

கஷ்டமெனும் காலத்திலும், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில்,
என் உதடுகள், உச்சரிக்கின்றன உனையே - அம்மா....

உம காலம் முழுவதுமே, உன்னை பிரியா வரம் வேண்டும்,
என்றென்றும் என் கண்ணின்மணி - ஆருயிரே நீ அம்மா....

உன்னை போற்றி பாதுகாக்க, நானுள்ளேன் என் தாயே,
இந்நாளில் இவ்வுறுதி, உனக்களிக்கிறேன் என் "அம்மா".....

Tuesday, April 20, 2010

வரி என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு. வரிப்பணத்தை கொண்டே ஒரு நாடு, அதனுடைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகின்றது. நாட்டின் சட்ட திட்டத்தின் படி, ஒவ்வொரு தனி நபரும், தான் சம்பாதிக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இல்லையென்றால் குற்றம் இலைத்ததாகி விடும். அது போலவே வருமான வரிக்கணக்கை தணிக்கை (Tax Filing) செய்ய வேண்டும்.

பெரும் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு, அந்நிறுவனமே சம்பளத்தில் இருந்து வருமான வரியை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து கொள்ளும். இது யாவும் உள்நாட்டில் நாம் சம்பாதிக்கும் வருமானத்துக்கு உரியவைகள் ஆகும்.

அதுவே நாம் வெளி நாட்டில் வேலை செய்யும் போது, அந்தந்த நாட்டின் வருமான வரி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாட்டிலும் இச்சட்டம் மாறு பட்டதாக இருக்கும்.

ஆனால் வெளி நாட்டில் நாம் வருமான வரி கட்டி சம்பாதித்த பணத்தை நம் நாட்டிற்கு அனுப்பும் பொது, அதற்கென பிரத்யோக சட்டம் இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். இதற்காக இந்திய அரசு, தான் நட்பு பாராட்டும் நாடுகளில், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. அதாவது, எந்த நாட்டில் நமக்கு வருமானம் வருகிறதோ, அந்த நாட்டில் மட்டும் வருமான வரியை செலுத்தினால் போதும். அதே பணத்தை நாம் நமது ஊருக்கு அனுப்பும் போது, அதற்கென தனியாக வருமான வரி கட்ட தேவை இல்லை. இதற்காக, "இரட்டை வரி விடுப்பு சட்டம்" உள்ளது.

இச்சட்டத்தின் படி, குறிப்பிட்ட நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தொழில் செய்பவர்கள், அங்கு ஈட்டும் வருமானத்துக்கு, உள்நாட்டில் வருமான வரி கட்டினால் போதும். மீண்டும் ஒரு முறை நமது சொந்த நாட்டில் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதை வங்கி மூலமாகவோ, அல்லது அனுமதிக்க பட்ட பிற முறைகளிலோ நாம் சொந்த ஊருக்கு அனுப்பி, எந்த வரியும் கட்டாமலே, வருமானத்தை தணிக்கை செய்து கொள்ளலாம்.

மேலும் விவரமான தகவல்களுக்கு, கீழே குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் காணலாம்.

http://www.incometaxindia.gov.in/publications/9_Income_Tax_For_NRI/Chapter012.asp

Friday, April 16, 2010

தமிழ் அகராதி

மொழிப்பற்று என்பது எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒன்று. இதில் விசேஷம் என்னவென்றால், தாய் மொழியின் அருமையும், பெருமையும், நாம வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ இருக்கும் பொது ரொம்ப அதிகமாகவே தெரியும். ஏன்னு சொன்னா அப்போ நம்ம தாய் மொழி பேச நம்ம கூட யாரும் இருக்க மாட்டாங்க அல்லது ரொம்ப குறைவா இருப்பாங்க. ஆனா நான் மலேசியா வந்ததில் இருந்து, எனக்கு ஒரு வெளிநாட்டில் இருக்கும் எண்ணமே வரல. அடுக்கு காரணம், எங்க பார்த்தாலும் தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் உணவகம் என அடுக்கிட்டே போலாம்.

ஆனா, ஜாப்-ல அப்படி இல்ல. பெரும்பாலானவங்க சீனா காரங்க தான். மேனேஜர், டீம் லீடர் இப்படி எல்லோருமே. எங்க போனாலும் தமிழ் பேசற மக்கள் கொஞ்சமாவது இருக்கறது உண்டு. அப்படி தான் எங்க ஆபீஸ்லும் என்ன மாதிரி இன்னும் இரண்டு சென்னை பசங்க இருக்காங்க. இடைவெளி நேரத்தில் வெளில போறது, லஞ்ச் சாப்ட போறது, போர் அடுச்சா ஒன்னு கூடி கத பேசுறது, இப்படி அடுக்கிட்டே போலாம்.

இதுல என்ன விசேஷம்னா, எங்க பக்கதுலயே மேலதிகாரிகள் (மேனேஜர்) இருப்பாங்கா.. அந்த சமயம் இங்கிலீஷ் ல பேச முடியாது. எப்போ தமிழ் பேசரமோ இல்லையோ, அப்போ தமிழில் தான் பேசி ஆகனும். அப்போது தான் அவங்களுக்கு புரியாது. இதுல முக்கியமான விஷயம் என்னனா, சுத்த தமிழ்ல பேசணும். ஆங்கிலம் கலந்து பேசக் கூடாது.

இதற்காகவே, நாங்கள் ஒவ்வொரு முக்கியமான விஷயத்துக்கும், அதற்கேற்ப தமிழ் வார்த்தை (அகராதி) வைத்துள்ளோம். உதாரணமாக, சில வார்த்தைகள் இங்கே குறிப்பிடுகிறேன்....

பழைய நகரம் வெல்ல காபி - Old Town White Coffee
நேர சதுரம் - Times Square
பக்கத்து ஊட்டு காரி - Next seat girl
சாப்பாடு நீதி மன்றம் - Food Court
பாவப்பட்ட ஊர் - "Sin"gapore
கொட்ட தண்ணி - Coffee
மருத்துவ சான்றிதழ் - MC (Medical Certificate)
முக்கிய சாவி - PrimaryKey
வெளிநாட்டு சாவி - Foreignkey
நாட்டாமை - Project Director
அடியாள் - Developers


இப்படி நெறைய அடிகிட்டே போலாம். எப்படி-லாம் நாங்க தமிழ் வளர்கறோம் பார்தீங்களா... :)

Friday, March 05, 2010

மகளிர் தினம்.....

மார்ச் மாதம் ஆறாம் நாள் - மகளிர் தினமாக கொண்டாட படுகிறது. சங்க காலம் தொற்று பெண்மையை போற்றி வந்துள்ளது - நம் தமிழ் இனம். இதனை நாம் சங்க தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்ணின் பெருமை போற்றும் ஒரு நாலு வரிகள்........

அழிக்க முடியாத "மை" - பெண்"மை"
அது அழித்திடுமே நாட்டின் வன்"மை"
சேர்த்திடும் வீட்டிற்கு பெரு"மை"
என்றென்றும் போற்றிடுவோம் பெண்ணை

;;