Saturday, May 08, 2010

மே 9 - அன்னையர் தினம். அன்னையின் சிறப்பை பறை சாற்றும் வகையாக நாம் பாவிப்பது தான் இந்த அன்னையர் தினம். நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, சகலமுமாய் இருப்பவர் தான் அன்னை. கருணை, அன்பு, பாசம், நேசம், அறிவு, இது போன்றவைகளை நினைக்கையிலே, நம் மனதிற்குள் வருபவள் தான் தாய்.

நாம் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதும் போது, அதில் சில வரிகளை மட்டும், கீழ் கோடிடுகிறோம். காரணம், அந்த வரியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக. இது போல தான், இந்த அன்னையர் தினமும். அன்னை என்பவள் சிறப்பு பெற்றவள். இந்த சிறப்பிற்கு, மகுடம் சூட்டும் விதமாக, இத்தினத்தை அன்னையர் தினமாக நாம் போற்றி வருகிறோம்.

இத்தினத்தில், என்னை பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய என் அன்னைக்கு எனது நன்றியை நான் உரித்தாக்குகிறேன், மற்றும் எல்லா நலவுகளையும் எனக்களித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றிகள் பல கோடி. என் அன்னைக்காகவும், மற்றும் உலகிலுள்ள எல்லா அன்னையர்களுக்காகவும் சில வரிகள் இதோ......

(இவ்விடத்தில், "நீ" என்பதை "நீங்கள்" எனவும், "உன்" என்பதை "உங்கள்" என்றும் பொருள் கொள்ளவும்.)

அம்மா, அம்மா, அம்மா
உச்ச்சரிக்கயிலே உளம் மகிழ்குது, நீ தானே - என் அம்மா....

பத்து மாத காலம், இன்னல்கள் பல ஏராளாம்
இப்புவியிலே நான் சஞ்சரிக்க, காரணம் நீ அம்மா......

உறக்கத்தில் கண் விழித்து, நான் அழுத கனபோது
உறக்கத்தை கலைத்து விட்டு, நெஞ்சோடு எனை அணைத்தாய்...

பசி என்று தெரியாமல், "ஹோ வென" அழுதேனே
பாசமாய் அமுதூற்றி, எனை நீ வளர்த்தாயே....

நடக்க தெரியா பருவத்தில், கீழே நானும் விழகயிலே,
ஓடோடி எனை தூக்கி, உளம் துடித்தாய் - நீ அம்மா....

அடம்பிடித்து, சண்டித்தனம், பல நூறு செய்கையிலே
நீதிக்கதை பல சொல்லி, அமைதிப்படுத்தினாய் - நீ அம்மா....

அனுதினமும் ரசித்தாயே, சிறு பிள்ளையாய் வளர்கையிலே
அன்பென்ற வார்த்தையின், பிறப்பு தான் - நீ அம்மா.....

பண்பாடு, பழக்க வழக்கம், கற்றுக்கொண்டேன் உன்னிடத்தில்
பாசம் என்னும் பாசறையில், எனை வளர்த்தாய் - நீ அம்மா....

மற்றவர் முன் என் தவறை, மறக்காமல் மறைத்தாயே
மனு நீதி சோழனாய், பின்பு கண்டித்தாய் - என் குறையை

வெற்றிபடிகளை, என் பாதம் மிதிக்கவே,
ஒவ்வொரு தினமும் உன் தவறாத பிராத்தனைகள்....

அயராத முயற்சியினால், குறையாத அன்பினால்
என்னை, ஆளாகினாய் - நீ அம்மா....

பல நாட்கள் தாமதமாய், வீட்டிற்கு நான் வருகையில்
பசியோடு நெடுநேரம், காத்திருந்தாய் - நீ அம்மா.....

தோல்விகளால் நான் துவண்டு, சோர்வுற்ற நேரத்தில்
தேற்றினாய் கனிவான, வார்த்தைகளில் - நீ அம்மா......

என், முகவாட்டம் நீ பார்த்து, என் மனவோட்டம் நீ அறிந்தாய்
உற்சாக வார்த்தைகளால், உச்சி முகர்ந்தாய் - நீ அம்மா......

சொல்லாலோ, செயலாலோ, நோவினைகள் நான் கொடுத்திருப்பின்
வருந்துகிறேன் அதற்காக, மன்னியுங்கள் - நீ அம்மா...

என் உயர்வில் உன் பங்கு, அளவிட முடியாதே,
அறிவின் ஊற்றிடமே, அகரம் தான் - நீ அம்மா...

கஷ்டமெனும் காலத்திலும், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில்,
என் உதடுகள், உச்சரிக்கின்றன உனையே - அம்மா....

உம காலம் முழுவதுமே, உன்னை பிரியா வரம் வேண்டும்,
என்றென்றும் என் கண்ணின்மணி - ஆருயிரே நீ அம்மா....

உன்னை போற்றி பாதுகாக்க, நானுள்ளேன் என் தாயே,
இந்நாளில் இவ்வுறுதி, உனக்களிக்கிறேன் என் "அம்மா".....

;;